முகப்பு...

Thursday 23 January 2014

மௌனமாய்...!!


என்ன பொன்னாத்தா.. நான் வாரதக்கூட கண்டுக்காம போற..?

குரல் கேட்டுத் திரும்பிய பொன்னாத்தா எதிரே முனிம்மா நிற்பதைக்கண்டாள்.  கவனிக்கல முனிம்மா...ஏதோ விசனம்.

“என்னாச்சு இன்னிக்கு ரொம்ப கவலையா இருக்கறியே..?!”

உனக்கே தெரியும் எங்க மொதலாளியம்மாவ பத்தி, அவங்க எவ்ளோ அன்பா எங்கிட்ட இருப்பாங்கனு. எதாயிருந்தாலும் எங்கிட்ட சொல்லுவாங்க. நல்லது கெட்டது அவுக ஆஃபீசு விசயம் இப்படி யாரப்பார்க்கறாங்க...எப்ப வருவாங்க எல்லாம் சொல்வாங்க.

எனக்கும் அந்தவீட்டில வேலை செய்யறோம்ன்ற நினப்பே இல்லாம  நம்ம வீடுமாதிரியே இருக்கும்.  அந்த உரிமையில சிலநேரம் எங்க போறீங்க எப்ப வருவீங்க.. நேரத்துக்கு வாங்கன்னு சொல்வேன். முன்னெல்லாம் அத சந்தோசமா ஏத்துக்கிட்ட அந்தம்மா, இப்ப கொஞ்ச நாளா அவங்க சுதந்திரத்துக்கு இடைஞ்சலா நினைச்சுட்டாங்க போல.

இப்பல்லாம் அதிகம் அப்படி உரிமையா அன்பா பேசறது இல்ல. எதும் வேலைன்னா சொல்வாங்க..நானும் செஞ்சுட்டு வந்திடறேன்.  இருந்தாலும் என்ன அறியாமையே ஏதோ என் மனச சஞ்சலப்படுத்துது. எங்கனா கொஞ்ச நாள் அமைதியா போயிடமாட்டமானுகூட தோணுது.

ம்ம்.. அதுக்கு என்ன செய்யறது.  உன்ன யாரு வேல செய்ற வூட்ல எல்லாம் அன்பா இருக்க சொன்னது..போனமா வேலைய முடிச்சமா சம்பளத்த வாங்கினமானு இல்லாம..தேவையா இது..??

”சரி நாளைக்கு கோயிலுக்கு வாரியா...? அங்க ஒரு சாமியார் வந்திருக்காராம்.  எப்பவும் மவுனத்துலதான் இருப்பாராம். எப்பனாச்சுந்தான் பேசுவாராம். ஆனா நம்ம குறைய சொன்னா கொஞ்சம் பாரம் குறையும்...போலாமா..?”

ம்ம் வா, நானும் கோயிலு குளமுன்னு போயி ரொம்ப நாள் ஆச்சு. நாளைக்கு காலைல வெள்ளென வரேன் போவோம்  பொயிட்டு வந்தா மனசுல பாரம் கொறஞ்சமாதிரி இருக்குமுல்ல.  ராத்திரி சாப்பாட்டை  முடித்து படுத்தவள், நீண்ட நேரம்  புரண்டு புரண்டு படுத்து பின் தூங்கிப்போனாள்.

கோயிலில் கூட்டம் இல்லாமல் சற்றே அமைதியாக இருக்க. சாமியார் முன்பு அமைதியாக உட்கார தன்னையறியாமல் வரும் கண்ணீரை கட்டுப்படுத்த சிரமப்பட்டாள் பொன்னாத்தா.

இப்ப எதுக்கு கண்ணீர் வடிக்கிற அமைதியா உட்காரு என்று அதட்டிய முனிம்மாவை பார்த்து  மௌனமாய் சிரித்த பொன்னாத்தா கண்களைத் துடைத்துக்கொண்டாள்.

தொடர்ந்து இதையே கடைபிடி ..கண்ணீரே வராது அசரீரி மாதிரி குரல் கேட்டு பொன்னாத்தா நிமிர,  எதிரே மௌனச்சாமியார் புன்னகைத்தபடி.“ எல்லாம் உன்னால, உனக்காக, உன்னோடதுன்னு நினைக்காம, உனக்கான பணி மட்டும் செய்துட்டு மற்ற விசயங்களில் தலையிடாம உன்பாட்டுக்கு மௌனமா கடந்துபோகப்பழகு.  கண்ணீரே வராது. கவலையும் இருக்காது”

திடுக்கிட்டு கண்விழித்த பொன்னாத்தா கனவில் கண்ட சாமியாரின் வார்த்தைகளில் தெளிந்தவளாய் மனம் இப்பொழுது இலேசாகி இருப்பதை உணர்ந்தவள், வீட்டு வேலைக்கு செல்ல தயாரானாள்..:)

11 comments:

  1. கடைப்பிடிக்க வேண்டிய உண்மை... இனி பொன்னாத்தாவிற்கு பிரச்சனை இருக்காது...

    ReplyDelete
  2. சிறப்பான கரு கொண்ட கதை! அருமை! நன்றி!

    ReplyDelete
  3. சொல்லிச் சென்றவிதமும்
    முடித்த விதமும் அருமை
    தலைப்பு மிகப் பொருத்தம்
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்திற்கு மிக்க மகிழ்ச்சி...:) _/\_

      Delete

  4. வணக்கம்

    உன்றன் பணியை உவந்து புரிந்திட்டால்
    என்றும் இடரே இலை!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. கவிஞரின் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி..:)

      Delete
  5. வணக்கம்
    கதையின் கருத்தாடல் நன்று... மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் தொடர்ந்த வாழ்த்து எம் எழுத்துக்களை மெருகேற்றிக்கொள்ள உதவட்டும்..:)

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__