முகப்பு...

Friday 2 August 2013

தூரிகை கண்ட முத்துக்கள் - நாள் 4

என் இனிய தூரிகை கண்ட முத்துக்களுக்கு இதமான காலை வணக்கம். என்ன எல்லாரும் அலுவலகம் சென்றபின் பதிவுன்னு பார்க்கறீங்களா..? சரி அலுவலகத்தில ஓய்வு நேரம் இருக்கும்போது அப்படியே இந்தத் தூரிகை கண்டெடுத்த முத்துக்களின் ஒளியில் அவர்கள் பூந்தோட்டம் சென்று மலர்களின் மணம் நுகர்ந்து வாழ்த்திட்டு வாங்க.

இன்று பிரமிக்க வைக்கும் இயற்கைய ரசிச்சுட்டு தொடர்ந்து மற்ற மலர்களைக் காண்போம்
கண்முன்னே இருப்பதை
காணவிடாது மறைத்து..
வளர்ந்ததை வீழ்த்தியும்
வீழ்ந்திருப்பதை 
உயரத்தில் அமர்த்தியும்
இடம்மாற்றித் 
தடம் மாற்றித் தடுமாறவைக்கும்
ஆடிமாதக்காற்று...
பிரமிக்க வைக்கும் இயற்கை...!!!
ஹிஷாலி அவர்களின் கவரிமானின் கற்பனை காவியம் பெயருக்கேற்ப வலைத்தளமும் அழகு. அழகு வலைத்தளத்தில் மட்டுமல்ல நேர்த்தியாக பல்சுவையாய்பகிர்ந்திருக்கிறார் தன் சிந்தனைகளை.  கவிதை, சமூகக்கவிதை,பெண்ணியக்கவிதை, ஜோக்ஸ், சிறுகதை ஹைக்கூ...இன்னும் நிறைய.  அவற்றில் ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல ஒரே ஒரு சமூகக் கவிதை பகிர்கிறேன்
//அய்யோ என்றாலும்
ஆருயிர் திரும்பாது
அதற்குள் அறிந்துகொள்
இதுவே ஆரம்பம்
அதுவே உலகின் ஓரின்பம் ...!//
இவரின் மற்ற பதிவுகளைகளையும் சென்று பார்வையிடுவோம்.ஹிஷாலியின் பதிவுகள் தொடர்ந்திட மனமார்ந்த வாழ்த்துக்கள்.
*****
சகோதரர் திரு.திண்டுக்கல் தனபாலன் அவர்களின் வலைத்தளம் அனைவரும் அறிந்த ஒன்றே. அனைவரையும் எப்பொழுதும்ஊக்கப்படுத்தியும், தன் பல்வகைப்பட்ட பதிவுகளால் நமையெல்லாம் மகிழ்வித்தும் வரும் இவரது தளத்தில்பேசுங்கள்..பேசுங்கள்...ஆனால்..? இதில் பேச்சின் தன்மையைப்பற்றி அழகா விளக்கியிருக்கிறார். மனிதனின் பிரச்சினைக்கு காரணமான குணம் என்ன..? (அவரின் பதிவில் குறிப்பிட்ட சில வரிகள் இங்கே பகிர்வதற்கு  எண்ணினேன் இயலவில்லை..) அவரது தளத்தில் சென்று பார்வையிடுவோம்.  இவரது தளம் ஏற்கனவே அனைவராலும் அறியப்பட்டு, பலமுறை அறிமுகமாகியிருக்கும் தளமாக இருப்பினும் புதிதாக வலைச்சரத்தில் இணைந்திருக்கும் வலைப்பூ நண்பர்களும் அறியும் வகையில் பகிர்ந்துள்ளேன்.
சகோதரருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
*****
தேவா. சு அவர்களின் வாரியர் (Warrior) ஜெயிக்கப்பிறந்த இவர் ஆன்மீகப்பயணம் செய்து, அனுபவத்தையும் பகிர்ந்து சமூகத்தைப்பற்றிய கட்டுரைகள் தொகுத்து காதல் கவிதையில் மூழ்கி கதையும் சொல்லி சமூகக்கதையின் மூலம் நமக்கு நம் சமூகத்தில் நடப்பனவற்றைப் படம்பிடித்துக்காட்டுகிறார்.  இவரின் சமூகக்கதையில் பைத்தியம் 
கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.  
 //"பைத்தியக்காரனுகள பாரேன்....பசிச்சுதுன்னா குப்பைத் தொட்டியில இருந்து ஏதோ ஒரு எச்சில் எலைய எடுத்து தின்னுட்டு சொகமா சுத்திட்டு இருக்கானுக....நம்ம பொழப்ப பாத்தியா நாய் படாத பாடு...."
யாரோ யாரிடமோ சொல்லிக் கொண்டு பைக்கில் பறந்து கொண்டிருக்க....//
பைத்தியம் அல்லாதவரைக்கூட பேசிப்பேசி பைத்தியமாய் மாற்றிவிடும் சமூகம்...இவரின் எழுத்துக்கள் கண்ணெதிரே ஒரு பைத்தியம் நிற்பதுபோல் தோன்றுகிறது.  
தோழருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.  தொடரட்டும் தங்களுடைய எழுத்துப்பணிகள்..
*****
வாழும் வரை நன்மைக்காக வாழ்ந்து பார்க்கவிரும்பும் R.V.Saravanan அவர்களின்
குடந்தையர்... வலைப்பூவின்  முகப்பே மனதைக்கவரும் படியாக அமைத்துள்ளார். இவரது தளத்தில் அனுபவம் பேசுது, கவிதை சோலை, சிரிப்பு, ஓவியம், சிறுகதைகள் எனப் பல்சுவையான பகிர்வுகள் காட்சியளிக்கின்றன.. சோழர்கால அற்புதம் ஐராவதேஸ்வரம்
பதிவில்   சோழர் காலத்தின் புகழை இன்றளவும் உலகுக்கு உணர்த்தும் வகையில் அமைந்திருக்கும்  தாராசுரம் ,கோவிலை பற்றிய சிறப்பு தகவல்களை அழகிய கோயிலின் தோற்றங்களுடன் பகிர்ந்துள்ளார். 
 //தாரன் என்பவன் வழிபட்டதால்  தாராசுரம் எனவும்,இந்திரனின் பட்டத்து  யானை ஐராவதம், தன் சாபம் தீர வந்து வழிபட்டு  பேறு பெற அருளிய இறைவன்  ஐராவதேஸ்வரர் எனவும் இந்த ஸ்தலம் ஐராவதேஸ்வரம் எனவும் பெயர் பெற்றிருக்கிறது// 
கோயிலை தரிசித்து வருவோம் வாங்க..
தோழர் சரவணன் அவர்களுக்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள்.. நாளை வேறு சில மலர்களைக் கண்டு ரசிப்போம் தோழமைகளே. 
காயத்ரியின் தத்துவத்துடன் இன்றைய நாள் இனிதே அமைய வேண்டுகிறேன்.
 
சிரிப்பில் ஒளிந்திருக்கும் அழுகை
அழுகையில் ஒளிந்திருக்கும் சிரிப்பு
அன்பில் ஒளிந்திருக்கும் கயமை
இரக்கத்தில் ஒளிந்திருக்கும் ஏளனம்
கோபத்தில் ஒளிந்திருக்கும் பொறுமை
சகிப்புத்தன்மையில் ஒளிந்திருக்கும் வெறுப்பு
பசியில் ஒளிந்திருக்கும் வறுமை
பணத்தில் ஒளிந்திருக்கும் கருணை
முரண்கள் அனைத்தையும் 
முடிவின்றி கற்கின்றோம்..!!

அறிமுகமாகும் நண்பர்களுக்கும் வலைச்சரத்தின் மனமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துகளும்.  தங்கள் அனைவரது எண்ணங்களும் எழுத்துக்களாய் எண்ணற்று வெளிவர வலைச்சரத்தின் மலர்கள் தொடர்ந்து தங்கள் பூந்தோட்டத்தில் மணம் வீசுவோம்.

அடுத்த பதிவில் சந்திப்போம். நன்றி... _/\_
வாழ்க வளமுடன்... J

No comments:

Post a Comment

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__