முகப்பு...

Thursday 25 October 2012

நகரமும், நாகரீகமும்..




நகரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் காணப்படும் காட்சிகளில் ஒரு சில தங்கள் பார்வைக்கு.  அடுக்குமாடிக்குடியிருப்பில் ஒரு அறை, இரண்டு அறை கொண்ட கட்டிடங்களில் மனிதர்கள் வசிப்பதே இன்று கடினமாக இருக்கிறது..தேவைக்கு என தேவைக்கு அதிகமான வீட்டு உபயோகப்பொருட்கள். மனிதர்களைவிட உபயோகப் பொருட்கள் அதிகமாகிவிட்ட நகர வாழ்க்கையில்...பொழுது போக்கு, நாகரீகம் என செல்லப்பிராணிகளாக வீட்டில் நாய்கள்.  நம் வீட்டில் பேசினாலே பக்கத்துவீட்டிற்கு கேட்கும் அளவு நெருக்கமான வீடுகள். அதில் விடாது குரைக்கும் நாய்கள்..நம் வீட்டில் கூட தொலைபேசியில் பேசமுடியாதவாறு உதவிகள்  செய்கிறது.  வீட்டைத் தூய்மையாக வைத்துக்கொள்ளும் இவர்கள் நாய்களை பொதுவான நடைபாதையில்(ஒரு வீட்டிற்கும், மற்றுமொரு வீட்டிற்கும் செல்லும் பொது இடம்) நாயைக் கட்டி வைத்து அதற்கான உணவுகள் எறும்பும், மொய்த்துக்கொண்டு, சில நேரம் நாய் தட்டி கொட்டி மிக அழகாய்த் தூய்மையாய் காட்சியளிக்கிறது. 

தினம் காலை குடியிருப்போர் தம் தம் வீட்டு செல்லப்பிராணியான நாய்களை மலம் கழிக்க செய்ய வெளியில் கூட்டிச்செல்வது.  நேரமின்மை, அவசர உலகம் என நம் முன்னோர்கள் கூறியவற்றைக் கடைபிடிக்க தடை சொல்லும் நாம் நாய்களை காலை அழைத்துச் செல்ல தவறுவதில்லை.  அதிலேயும் மிக முக்கியமா கவனிக்கப்படவேண்டிய நாம் கற்ற நாகரீகம் என்னவெனில்நான் பார்த்தவரை தெருவோர நாய்கள் நடுவீதியில் ஆங்காங்கே மலம் கழித்துப்பதில்லை.  ஓரமாக, பூங்கா, மரத்தடி என்றே செல்கின்றன.  வீட்டு உரிமையாளர்கள் கையில் சங்கிலியால்  பிடித்து அழைத்து வரப்படும் செல்லப்பிராணிகள் நடுவீதியில் மலம் கழிக்கின்றன.  உடல் ஆரோக்கியத்திற்காக காலை நேர நடைப்பயிற்சி செல்லும் பொழுது ஆரோக்கியத்திற்குப் பதிலாக அதிக நோய்களையே அழைத்துவர உதவுகிறது.  ஒருபுறம் குடியிருப்போர் ஆங்காங்கே முறையற்று நிறுத்தியிருக்கும்  வாகனங்கள், மறுபுறம் காலை பள்ளிக்கு குழந்தைகளை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் என காலை நேர நடைப்பயிற்சியே கடினமாகி வருகிறது.அதுமட்டுமன்றி செல்லப்பிராணிகளின் செயல்களால் நடப்பதற்கே சற்று யோசிக்கவேண்டியுள்ளது.  நாகரீகம் எனக் கருதி நடுவீதியில் மலம் கழிக்கச் செய்யும் நாகரீக நகரவாசிகளாகிய நாம்..இயற்கை வாழ்வைத் தொலைத்துவரும் இந்த நேரத்தில் இதுபோன்ற சுகாதாரமற்ற செயல்களை செய்யத் தவறுவதில்லை.

அதுமட்டுமன்றி அடுக்குமாடிக்குடியிருப்பில் கீழ்த்தளத்தில் வசிப்பவர்களின் ஒத்துழைப்பு இன்னும் சற்று அதிகமாகவே இருக்கும்.  தனது வீட்டிற்கு முன் இருப்பதால் சாலையும் தனக்கே சொந்தமென ஆக்கிரமித்து தேவையோ தேவையில்லையோ சில, பல செடிகளைபேருக்கு பயிருட்டு முறையாகப் பராமரிப்பதுகூட கிடையாது.  அவர்களது நோக்கம், யாரும் வீட்டின் முன் வண்டி நிறுத்தி அந்த இடத்தை உபயோகித்துவிடக்கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருக்கின்றனர்.  சாலையோரம் இரண்டு கீழ்த்தள வீட்டு உரிமையாளரும் இப்படி ஆக்கிரமிக்க சாலையில் வரும் வாகனத்தில் இருந்து ஒதுங்கி செல்லக்கூட சிலநேரம் இடம் இருக்காத வகையிலான ஒத்துழைப்பு.  வீட்டை மிகத் தூய்மையாகவும், அழகாகவும் வைத்திருக்கும் இவர்கள் வீட்டிற்கு வெளியே எப்படியிருப்பினும் கவலை கொள்வதில்லை..தம் வீட்டுக்குப்பைகளை வீட்டுக்கு வெளியே வைக்க தெருவோர நாய்கள் அவற்றை சுத்தம் செய்து தெருவில் வீசி விளையாடி மிகவும் அழகாகக் காட்சியளிக்கும் நெகிழிப்பைகள், உணவு வாங்கி வந்த ப்ளாஸ்டிக் டப்பாக்கள் மற்றும் ஒரு பெண்ணாக இருந்து சொல்ல வெட்கமாக இருப்பினும் இதைப் படிக்கும் யாரேனும் ஒருவர் இப்படிச்செய்திருந்தாலும் தம்மை மாற்றிக்கொள்ள மாட்டார்களா என்ற ஆதங்கத்திலேயே கூறுகிறேன். பெண்கள் மாதவிடாய்க் காலங்களில் உபயோகிக்கும் சானிடரி நாப்கின்...அதைக்கூட நடுவீதியில் வீசியெறியும் அளவிற்கு நாகரீகத்தின் உச்சத்தில் இருக்கிறோம். குடியிருப்பின் மையப்பூங்காவில் திருமணம், பிறந்தநாள் போன்றநிகழ்வுகள் நடத்துவார்கள். குடியிருப்போர் நலச்சங்கத்தின் அனுமதியுடன்.  தவறில்லை.. குடியிருப்போருக்கான இடமே அது.  ஆனால், விழா முடிந்தவுடன் நம் வீட்டை சுத்தம் செய்வது போல் சுத்தம் செய்துவிட்டுப் போனால் எவ்வளவு நன்றாக இருக்கும். நாளை நமது குழந்தைகளும் அங்கு விளையாட நேரிடும், நாமும் அங்கு உட்கார்ந்து கதை பேசுவோம் என்ற உணர்வே இல்லாமல்,மிச்சம் மீதி உணவு வகைகள், உணவு தயாரிக்க உபயோகித்த ஒரு சில வேண்டாத பொருட்கள், சாப்பிட்ட காகித தட்டுக்கள், நெகிழிப்பைகள், தண்ணீர் குவளைகள் என அனைத்தும் ஆங்காங்கே வீசப்பட்டு மிக மிக அழகாக நம் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள உதவி வருகின்றனர். தண்ணீர் தொட்டி நிரம்பி வழிந்து அது எங்கும் சென்று நீர்த்தேக்கம் ஏற்படுத்தும். பார்த்து மோட்டாரை நிறுத்த மாட்டார்கள்.  நான் தானே மின்சாரத்திற்கு பணம் கட்டுகிறேன் உங்களுக்கென்ன எனக் கேட்கும் நல்லோர்கள்.  தன் வீட்டைத் தூய்மைப்படுத்தி அந்தத் தண்ணீரை நடு வீதியில் வீசி அழகுபடுத்துபவர்கள் என அடுக்குமாடிக்குடியிருப்பில் மனதை வலிக்கச்செய்யும் இதுபோன்ற பல காட்சிகள்  நித்தமும் பார்க்க நேரிடுகிறது.  இந்த வளர்ச்சி பெருமை கொள்ளக்கூடியதா..?? என சற்றே சிந்திப்போம்.

இதை ஏன் இங்கு கூறுகிறேன் எனக்கேட்கலாம்.  நம்மில் யாரேனும் இதுபோன்ற செயல்கள் செய்பவராக இருப்பின் இதைப்படிக்கும்போது இப்படியெல்லாம் இருக்கிறதா என எண்ணிப்பார்த்து இனி அதுபோல் செய்யாமல் தவிர்க்கலாமே என்றுதான் இந்தப்பகிர்வு. நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் சாதாரணச் செயலாகவேத் தோன்றும்.  ஆனால் அதன் பக்கவிளைவுகளும், அதனால பிறருக்குத் தோன்றும் சங்கடங்களும் நாம் அந்த இடத்தில் இருந்து உணர்ந்து பார்க்கவே புரிய வரும். எனவே அந்த இடத்தில் நீங்கள் இருந்தால் தங்கள் மனநிலை எப்படி இருக்கும் என சற்றே சிந்தித்து இதுவரை அப்படி செய்திருந்தால் யாரேனும் ஒருவர் தம்மை மாற்றிக்கொண்டாலும் மகிழ்ச்சியே.  தங்கள் குடியிருப்புகளில் இதுபோன்ற நிகழ்வுகள் கண்டீர்கள் எனில் சற்றே புரியவைக்க முயற்சி செய்யுங்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு.  நல்லவை நோக்கி பயணிப்போம்.  ஆரோக்கியமான, முன்னோர் காட்டிய யார் மனதும் புண்படாத அனைவருக்கும் மகிழ்ச்சி வழங்கிய நாகரீகத்தைப் பின்பற்றத் துவங்குவோம்.  

10 comments:

  1. if you tell them anything about it they will look at you as their foremost enemy.
    especially, these dogs,''they can train the dogs to use their rest room.thats the right practice.
    one day while i was walking on the road, i saw a man scolding a stray dog for barking at his HIGH BREED DOG.As if the high caste people demeaning the so called lower caste.I told him,why don't you train the dog to use your rest room.He just stared at me as if he would burn me. He never realized his mistake.

    ReplyDelete
    Replies
    1. ம்ம்...நீங்கள் கூறுவது உண்மைதான். அப்படித்தான் பார்க்கிறார்கள். இருப்பினும் தொடர்ந்து சொல்வோம்..ஒருவர் மாறினாலும் மகிழ்ச்சிதானே..தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி தோழமையே..

      Delete
  2. குப்பை அங்கு மட்டுமா...? மனதில் நிறைய... (தானே தான் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்...)

    ...ம்... அதனால் தான் இப்படி...

    நன்றி...
    tm2

    ReplyDelete
  3. நகரங்கள் குப்பைகளாகி கிராமங்களையும் அழித்து வருகின்றன!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்..இனியாவது நாம் உணரத்துவங்கி இருக்கும் இயற்கையையாவது காப்பாற்றினால் நல்லது.

      Delete
  4. நகர வாழ்க்கை பற்றிய அருமையான பதிவு.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி தோழர்..

      Delete
  5. நிச்சயமாக ஒருத்தருக்காவது உறைக்கும்.....
    பலன் கிட்டும் பகிர்வுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழர்..திருந்தினால் மகிழ்வே..:)

      Delete

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__