முகப்பு...

Thursday 26 April 2012

ஆறுதல் கொள்வாயோ...??



என்னுள்ளத்தில் குடிகொண்டவனே..
உடைந்த உந்தன் குரல்
செவியில் திராவகமாய்ப் பாய்ந்து
எனை செயலிழக்கச்செய்த
உன் சோகத்தை என் தோளிறக்கி
சுகத்தை உனக்கு சொந்தமாக்கிக்கொள்......

தகப்பன்சாமியிழந்த
நீயுமங்கே த(னி)வித்திருக்க
உமக்கு தைரியந்தான் சொல்வதெப்படி..??

ஒளி வீசும் உன் கண்களுக்கு
கண்ணீரும் திரைபோட...
உனைக் காணும் தைரியந்தான்
எனக்கேது..??
முந்திவரும் கண்ணீரை
முந்தியிலே ஏந்துகிறேன்...

கம்பீரமாய் ஒலித்த குரலும்
கரகரத்து எனைக் கலங்கடிக்க...
கேட்கும் திறனில்லா
வரமும் கேட்டேனே....!!

விதியின் விளையாட்டினை
வேடிக்கைக் கண்ட நானும்..
இன்று
விரும்பியவன்
விதிக்கு விளையாட்டாக..
வெதும்பும் என் மனம்
வேதனையில் துடிக்கிறதே...!!

காலனைக் காண
கணந்தோரும்
கணக்கிலடங்கார் காத்திருக்க
அழையாக் காலனுமே
அவசரமாய் அங்கு வந்து சென்றதேனோ...??

என்னவனே எழுந்துவா...
இடரினை எதிர்த்து வா...
சாபம் பெற்றவனல்ல...
நீ
சாதிக்கப்பிறந்தவன்..!!!

சாதனை படைத்து
உனை சரித்திரம் பேசவே
சக்தியனைத்தையும் மீட்டு வா...

நீ கவலைமறந்து
காலமெல்லாம் பயணிக்க...
காத்திருக்கிறேன் காதலோடு..!!! 



No comments:

Post a Comment

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\__